

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலரான தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் மற்றும் பொதுமக்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப்பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் சில வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. #tamilnews