

புதுடெல்லி:
ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கி ஜெயில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த தண்டனையில் இருந்து மீண்டு வந்து அவர் இனி அரசியலில் வெற்றி பெற இயலாது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாலு பிரசாத் மீதான அடுத்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரி சபையில் அவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது 2006-ம் ஆண்டு ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்கள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டன.
அதில் 2 ரெயில்வே ஓட்டல்களை மாற்றியதில் லாலு பிரசாத்தும், அவர் குடும்பத்தினரும் பெரிய அளவில் ஆதாயம் அடைந்திருப்பது தெரிந்தது. இதுபற்றி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
முதல் கட்டமாக லாலு பிரசாத் யாதவிடமும், அவரது மகன் தேஜஸ்வியிடமும் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
அடுத்த கட்டமாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரிதேவிக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. ஓட்டல்கள் கைமாறியதில் ராப்ரிதேவி முக்கிய பங்கு வகித்ததாக ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.
எனவே இந்த வழக்கில் ராப்ரிதேவியும் சிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். #HotelScam #RabriDevi #LaluPrasadYadav #LaluPrasad