

புதுடெல்லி:
காங்கிரஸ் ஆட்சியில் விமானங்கள் வாங்கியது, ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. 3 வழக்குகளை பதிந்து உள்ளது. இது குறித்து விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் விமானங்கள் வாங்கியது தொடர்பாகவும், ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் இணைப்பாலும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்து உள்ளது. இதனிடையே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பிரசாந்த் பூஷன் பொது நல மனு தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் சி.பி.ஐ. 3 வழக்குகளை தாக்கல் செய்து உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.கே.கவுர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
111 விமானங்கள் ரூ.70 ஆயிரம் கோடியில் வாங்கப்பட்டன. இதனால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பெருமளவு லாபம் அடைந்ததாகவும், இந்தியா கடும் நிதி பற்றாக்குறைக்கு உள்ளானதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
லாபம் தரும் வழித்தடத்தில் ஆய்வு செய்து விமானங்களை இயக்காததால் விமான போக்குவரத்து துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக மற்றொரு வழக்கு பதிவு செய்து இருக்கிறோம்.
மேலும் லாபம் தரும் வழித்தடத்தில் இயங்கிய விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாலும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக 3-வது வழக்கை பதிவு செய்து உள்ளோம்.
இது தவிர ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களை இணைத்த விவகாரத்தில் பெரும் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. முந்தைய ஆட்சியில் விமான போக்குவரத்தில் ஆதாயம் அடைந்தவர்கள் பற்றிய விசாரணையை விரைவில் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்