மானேசர் நிலம் கையக மோசடி: அரியானா முன்னாள் முதல்வர் ஹூடா மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

அரியானா மாநிலம் மானேசர் நிலம் கையக மோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #Hooda #Manesarlandcase
மானேசர் நிலம் கையக மோசடி: அரியானா முன்னாள் முதல்வர் ஹூடா மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக (2004-07) பதவி வகித்த போது, குர்கான் மாவட்டத்தின் மானேசர் பகுதியில் மாதிரி தொழில் நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதனை கிராம மக்களிடம் கூறி அவர்களிடம் பயத்தை உண்டாக்கிய ரியல்ஸ் எஸ்டேட் நிறுவனங்கள், மக்களிடம் இருந்து நிலங்களை சொற்ப விலைக்கு வாங்கியுள்ளனர். 

அதன்பின்னர், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட்டது. இதனால், நிலங்களை சொற்ப விலைக்கு விற்று பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகள், அரசு மீது கடுமையாக குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2015-ம் ஆண்டு இவ்வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. 

இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 400 ஏக்கர் நிலத்தை பறித்ததாக ஹூடா உள்ளிட்ட 34 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், பூபிந்தர் சிங் ஹூடா, அவரது முதன்மைச் செயலாளர் முரளிலால் தயாள், யுபிஎஸ்சி முன்னாள் அதிகாரி சத்தா சிங், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அகிரி தில்லன் உள்ளிட்ட 34 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  #tamilnews #Hooda #Manesarlandcase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com