

கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை எனக்கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை போலீசார் கைது செய்தது. அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் முன்ஜாமீன் பெற்றார்.
இதற்கிடையே, சிபிஐ கைது செய்வதற்கான தடையை கொல்கத்தா கோர்ட் கடந்த வாரம் விலக்கிக் கொண்டதால், சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவாகினார்.
சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமறைவாகி உள்ள கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை தேடும் பணியை சிபிஐ அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். மேலும், நாளை காலை 11 மணிக்குள் சிபிஐ அலுவலத்தில் அவர் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.