யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

அமலாக்கத்துறையின் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது ஊழல், மோசடி ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராணா கபூர்
ராணா கபூர்
Published on

தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும்  ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது.

மேலும், வங்கி கணக்கில் இருந்து  வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று கைது செய்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, மும்பையில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். வரும் 11-ம் தேதிவரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணையை தற்போது எதிர்கொண்டுவரும் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள்  ஊழல், மோசடி ஆகிய குற்றவியல் சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக இன்றிரவு தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com