

புதுடெல்லி:
உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக 17 வயது இளம்பெண் ஒருவர் 20-6-2017 அன்று போலீசில் புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாகவே விசாரிக்க முன்வந்தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்-ஐ உடனடியாக கைது செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதைதொடர்ந்து, இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டில் உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார்-ஐ நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை லக்னோ நீதிமன்ற நீதிபதி முன்னர் இன்று மாலை ஆஜர்படுத்தி 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கற்பழிப்புக்குள்ளான இளம்பெண்ணை உன்னாவ் எம்.எல்.ஏ.விடம் அழைத்து சென்ற ஷசி சிங் என்ற பெண்ணை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.
சம்பவத்தன்று அந்த இளம்பெண்ணை ஒரு அறைக்குள் வைத்து குல்தீப் சிங் செங்கார் கற்பழித்தபோது, கதவின் வெளியே ஷசி சிங் காவலுக்கு இருந்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக எம்.எல்.ஏ.வின் சகோதரர் ஒருவரும் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். #tamilnews #cbi #Unnaocase #ShashiSingh