

வெம்பாக்கம்:
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 55). வாத்து வியாபாரி. தற்போது 1200 வாத்துகளை வைத்திருந்தார். ராஜாமணியிடம், அவரது உறவினர் கிருஷ்ணன் (24) என்பவர் ரூ.17 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
வாலிபர் கிருஷ்ணனும் வாத்து மேய்கிறார். கடனை அவர் திருப்பி தரவில்லை. இதனால் கிருஷ்ணனிடம் பணத்தை திருப்பி கேட்டு ராஜாமணி தகராறு செய்தார். இதனால் கிருஷ்ணன் ஆத்திரமடைந்தார்.
இந்த நிலையில், ராஜாமணி தனது 1200 வாத்துகளையும் மாமண்டூர் ஏரியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணன் உணவில் விஷம் கலந்து வீசினார். இதை சாப்பிட்ட 300 வாத்துகள் செத்து மடிந்தது.
இதுகுறித்து புகார் அளிப்பதற்காக ராஜாமணி இறந்த வாத்துகளை மூட்டை கட்டி தூக்கி கொண்டு தூசி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
மூட்டையை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். யாரையோ கொன்று உடலை மூட்டை கட்டி கொண்டு வந்திருக்கிறாரோ? என்று முதலில் நினைத்தனர். இதையடுத்து ராஜாமணி போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் மூட்டையை பிரித்து கொட்டி இறந்த வாத்துகளை போலீசாரிடம் காட்டி குமுறினார்.
போலீசார் வழக்குப்பதிந்து வாலிபர் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.