

ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து டி.எஸ்.பி எட்டியப்பன் மேற்பார்வையில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்ததாக 2050 பேர் மீதும், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகள், அதிவேகமாக வந்ததாக 30 பேரும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 60 வழக்குகளும், சிக்னலை மதிக்காமல் சென்றதாக 150 வழக்குகளும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 25 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 46 வழக்குகளும் என உள்பட மொத்தம் 3,602 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.