

மதுரை:
சென்னையை சேர்ந்த ஸ்தபதி முத்தையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பழனி தண்டாயுதபாணி கோவில் மூலவர் சிலை விவகாரம் தொடர்பாக என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். திடீரென எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். இதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கும்பகோணம், திருச்சி கோர்ட்டுகளில் நான் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதேபோல அறநிலையத்துறை கமிஷனர் ராஜாவும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தாமாக நேரில் ஆஜராகி, “பழனி கோவில் நவபாஷாண சிலையை கடத்தும் நோக்கத்தில் புதிதாக ஐம்பொன் சிலை செய்யப்பட்டுள்ளது. இதில் மனுதாரர்கள் முக்கிய குற்றவாளிகள் என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும்” என்றார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், பழனி சிலை விவகாரம் மோசடி வழக்கு தான். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தரப்பு கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது” என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதி, “மனுதாரர்களுக்கு 90 நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவரவர் சொந்த ஊரில் போலீசாரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு போலீசாரை கோர்ட்டு பாராட்டுகிறது” என்று உத்தரவிட்டார். பழனி கோவில் சிலை விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #palanitemplestatue #scamcase