கேரள முதல்-மந்திரி உருவப்பொம்மை எரித்து போராட்டம்: இந்து அமைப்பினர் 405 பேர் மீது வழக்கு

களியக்காவிளையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உருவப்பொம்மை எரித்து போராட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 405 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரள முதல்-மந்திரி உருவப்பொம்மை எரித்து போராட்டம்: இந்து அமைப்பினர் 405 பேர் மீது வழக்கு
Published on

களியக்காவிளை:

திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், கேரளாவில் நடந்து வரும் அரசியல் படுகொலைகளை கண்டித்தும் களியக்காவிளையில் நேற்று மாலை இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை தாங்கினார். தென் கேரள ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் பத்மகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் உருவப்பொம்மையை எரித்து கோ‌ஷம் எழுப்பினர். மேலும் களியக்காவிளை பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற 2 அரசு பஸ்களையும் அவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உருவப் பொம்மையில் எரிந்த தீயை அணைத்து அதனை கைப்பற்றினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கேரள அரசு பஸ்களை மீட்டு திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்து அமைப்பினரின் போராட்டத்தால் களியக்காவிளையில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பதட்டமும் நிலவியது.

இந்த போராட்டங்கள் குறித்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன், களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் கங்காதரன், மாவட்ட தலைவர் மிசா சோமன், பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், தென் கேரள ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் பத்மகுமார், பி.எம்.எஸ் மாவட்ட செயலாளர் வினோத் குமார் உள்பட 405 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பொது இடங்களில் அனுமதியின்றி கூடுதல், கொடும்பாவி எரித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com