

தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே கூட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மகள் சுகுணா (வயது22). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கணவருடன் இருந்து வந்தார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் சுகுணா வசித்து வந்தார். அவர் கூலிவேலைக்கு சென்று வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (23)என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளாடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால் சுகுணா 5 மாத கர்ப்பிணியானார். இது குறித்து வேணுகோபாலிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். சுகுணா கூறிய தகவலை வேணுகோபால் தனது அண்ணன் கோபிநாத்திடம் தெரிவித்தார். திருமணமாகாத வேணுகோபாலை திருமணம் செய்து கொள் என்று இனி தொந்தரவு செய்யாதே என்று சுகுணாவிடம் சென்று கோபிநாத் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பதறிப்போன சுகுணா தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தன்னிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய வேணுகோபால் மீதும், என்னை மிரட்டிய வேணு கோபாலின் அண்ணன் கோபிநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.