செஞ்சி அருகே மரத்தின் மீது கார் மோதி தொழில் அதிபர் உள்பட 3 பேர் பலி

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
செஞ்சி அருகே மரத்தின் மீது கார் மோதி தொழில் அதிபர் உள்பட 3 பேர் பலி
Published on

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 38). தொழில் அதிபர். இவர் செஞ்சி பகுதியில் உரக்கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை லட்சுமிநாராயணன் மற்றும் வக்கீல்கள் சக்திவேல் (42), ஆதிமூலம் (55), சின்னையா வீரப்பன் (40), சின்னதுரை (40), ஏழுமலை (45) ஆகியோர் ஒரு காரில் இன்று காலை செஞ்சியில் இருந்து ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.

காரை செஞ்சியை சேர்ந்த டிரைவர் நிஜாமொய்தீன் (30) ஓட்டினார். அந்த கார் காலை 11 மணி அளவில் செஞ்சி அருகே வளத்தியை அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் திடீரென்று திருப்பினார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த லட்சுமிநாராயணன், சக்திவேல், கார் டிரைவர் நிஜாமொய்தீன் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சின்னையா வீரப்பன், ஏழுமலை, ஆதிமூலம், சின்னதுரை ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com