திருச்சி அருகே பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலி

திருச்சி அருகே இன்று அதிகாலை பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை-சகோதரிகள் காயம் அடைந்தனர்.
திருச்சி அருகே பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து என்ஜினீயர் பலி
Published on

மணப்பாறை:

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை கீழகுயில்குடி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 58). இவரது மகள்கள்   கோகிலா (26), தேன்மொழி (20). இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். 

பின்னர் அவர்களை பெரியண்ணன் மற்றும் அவரது மகன் என்ஜினீயரான அரவிந்த்ராஜன் (22) ஆகியோர் காரில் அழைத்துக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டனர். காரை மதுரையை சேர்ந்த பாண்டியன் (30) ஓட்டினார். இன்று அதிகாலை  திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில்  துவரங்குறிச்சி அதிகாரம் பகுதியில் செல்லும் போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி, மறுபுறமுள்ள சாலையில் பாய்ந்து, அங்குள்ள 15அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த பெரியண்ணன், அவரது மகள்கள் கோகிலா, தேன்மொழி, அரவிந்த் ராஜன், டிரைவர் பாண்டியன், கோகிலாவின் குழந்தை ஜேசியா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அனைவரையும் மீட்டு  சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அரவிந்த்ராஜன் இறந்தார். 

டிரைவர் தூக்ககலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com