

ஊட்டி:
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36). இவரது மனைவி கலாவதி (30). இவர்களது மகன் பிரனாய் (10). கார்த்திகேயனின் பெற்றோர் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ளனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது.
பெற்றோரை பார்க்க கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு மொபட்டில் ஊட்டி புறப்பட்டு சென்றார். அங்கு பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் காரமடை புறப்பட்டார்.
அப்போது கோவையை சேர்ந்த கந்தசாமி என்பவர் தனது மனைவி தனலட்சுமி மற்றும் சிறுவர்கள் மாதவன், தரணி உள்பட 8 பேரை ஊட்டிக்கு சுற்றலா சென்று விட்டு காரில் கோவைக்கு புறப்பட்டனர்.
மரப்பாலம் என்ற இடத்தில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது முன்னால் சென்ற கார்த்திகேயனின் மொபட் மீது மோதியது. இதில் கார்த்திகேயனின் குடும்பத்தினர் தூக்கி வீசப்பட்டனர். கார் தடுப்பு சுவற்றை இடித்துக்கொண்டு 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வெலிங்டன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது மொபட்டில் சென்ற கார்த்திகேயன், அவரது மனைவி கலாவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். அவரது மகன் பிரனாய் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காரில் இருந்து கந்தசாமி மற்றும் அவரது மனைவி உள்பட 8 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலியான தம்பதி உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.