ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Published on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 131 பேர் 145 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனையில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 73 பேரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது என தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார்.

இதற்கிடையே, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று இறுதி நாள் என்பதால், மேலும் 13 சுயேச்சைகள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிடுவது உறுதியானது.

இந்த தேர்தலில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மேலும், 63 பேருக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் தான் வாக்குப்பதிவு சீட்டு முறை பயன்படுத்தப்படும். இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், இன்று மாலை 4.15 மணியளவில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.

நமது கொங்கு முன்னேற்ற கழகம் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் சுயேச்சைகள் பலர் தொப்பி சின்னம்  கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு தான் முன்னுரிமை என்பதால் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படவில்லை. மேலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மட்டும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com