12 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து - கலெக்டர் அதிரடி

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் சிவஞானம் 12 வாகனங்களின் தகுதி சான்றிதழை ரத்து செய்தார்.
12 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து - கலெக்டர் அதிரடி
Published on

விருதுநகர்:

மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குழு ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 44 பள்ளிகளின் 172 வாகனங்கள் மற்றும் அருப்புக்கோட்டை போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளின் 160 வாகனங்கள் ஆக மொத்தம் 76 பள்ளிகளைச் சேர்ந்த 332 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பணியினை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து வாகனங்களில் அவசர கால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா போன்ற 21 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அனைத்து இனங்களும் சரியான முறையில் உள்ள வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்றார். பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 21 பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தீயணைப்பு துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் உள்ள தீயணைப்புக்கருவிகளை அவசர காலங்களில் எவ்வாறு இயக்குவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்களையும் முறையாக பராமரிக்காத 12 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றிதழை நீக்கி கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com