கேம்பிரிட்ஜ் அனலிடிகா தகவல் திருட்டு வழக்கு - சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

பேஸ்புக் பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #CambridgeAnalytica
கேம்பிரிட்ஜ் அனலிடிகா தகவல் திருட்டு வழக்கு -  சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி:

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக பேஸ்புக் சமூக வலைதளத்திலிருந்து பல லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டன. 

பல லட்சம் மக்களின் அரசியல் தொடர்பான விருப்பு மற்றும் வெறுப்புகளை அறிந்து, அதற்கேற்ப அரசியல்வாதிகள் பிரசார யுக்தியை வகுக்கும் வகையில் பிரிட்டனைச் தலைமையிடமாக கொண்ட கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா மட்டும் அல்லாமல் இந்தியா உள்பட பல நாடுகளின் தேர்தல்களிலும், அனலிடிகா நிறுவனத்தின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் 5.62 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனமே கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, பேஸ்புக் மற்றும் அனாலிடிகா நிறுவனங்களுக்கு, மத்திய அரசு ஏற்கெனவே நோட்டிஸ் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில், மத்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று கூறுகையில்,  இந்தியர்களின் தகவல் திருட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவத்திற்கு மத்திய அரசு தொடர்சியாக அனுப்பிய  பல நோட்டிஸ்களுக்கு அந்நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. 

எனவே, கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சட்டவிரோதமாக இந்தியர்களின்  தகவல்களை திருடியிருக்கலாம் எனும் சந்தேகம் எழுவதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். #CambridgeAnalytica

X

Maalai Malar
www.maalaimalar.com