ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை- போலீசை கண்டித்து, கால்டாக்சி டிரைவர்கள் போராட்டம்

ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசை கண்டித்து கால்டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை- போலீசை கண்டித்து, கால்டாக்சி டிரைவர்கள் போராட்டம்
Published on

சென்னை:

மறைமலைநகர்- சிங்கபெருமாள் கோவில் இடையே கால்டாக்சி டிரைவர் ராஜேஷ் ரெயிலில் அடிபட்டு தலை துண்டாகி கிடந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

ராஜேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ ஒன்று வெளியானது. அதில் எனது சாவுக்கு சென்னை போலீசே காரணம் என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

திருமங்கலம் பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவன பெண் ஊழியரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றபோது, போலீஸ்காரர்கள் 2 பேர் தரக்குறைவாக என்னை திட்டினர். இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்கிறேன் என்று ராஜேஷ் பேசி இருந்த வீடியோ விவகாரம் போலீசுக்கு எதிராக திரும்பியது.

இதனைத் தொடர்ந்து ராஜேசிடம் அத்துமீறி நடந்துகொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்களும், கால்டாக்சி டிரைவர்களும் திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று கால்டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் போலீசை கண்டித்து போராட்டம் நடத்தினர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இரும்புலியூர் முதல் வண்டலூர் வரை வாகன பேரணி நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பங்கேற்றன.

தென்இந்திய சுற்றுலா வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இதுபோன்று போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் ராஜேசை தரக்குறைவாக திட்டிய போலீஸ்காரர்கள் யார்- யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மேற்கு இணை ஆணையர் விஜயகுமாரி, விசாரணை நடத்தி கமி‌ஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையில் கால் டாக்சி டிரைவரை அவதூறாக பேசிய போலீஸ்காரர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸ்காரரான அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com