கால்டாக்சி டிரைவரை போலீஸ் துன்புறுத்தவில்லை - விசாரணை அறிக்கையில் தகவல்

கால்டாக்சி டிரைவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டதை போல போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கால்டாக்சி டிரைவரை போலீஸ் துன்புறுத்தவில்லை - விசாரணை அறிக்கையில் தகவல்
Published on

சென்னை:

வேலூரை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ், கடந்த மாதம் 25-ந்தேதி, மறைமலை நகர் ரெயில் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ், அதற்கான காரணம் என்ன? என்பதை விவரித்து பேசி இருந்தார்.

அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த வீடியோவில் சென்னை போலீசே எனது சாவுக்கு காரணம் என்று கூறி இருந்தார்.

சென்னை திருமங்கலம் பகுதியில் சாலையோரமாக காரை நிறுத்தி இருந்த போது, போலீசார் வந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு சென்னை இணை கமி‌ஷனர் விஜயகுமாரிக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதன்படி இணை கமி‌ஷனர் விஜயகுமார் தீவிரமாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் போலீசார், கால்டாக்சி டிரைவர் ராஜேசிடம், நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தக்கூடாது என்று மட்டுமே அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவில் டிரைவர் ராஜேஷ் குறிப்பிட்டதை போல தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com