கால்டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தல்- 3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

மாங்காடு அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவத்தில் போலீசார் சிறப்பாக பணியாற்றி 3 மணி நேரத்தில் காரை மீட்டனர்.
மீட்கப்பட்ட கார்
மீட்கப்பட்ட கார்
Published on

பூந்தமல்லி:

மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூரில் சவாரி ஏற்ற வருமாறு இன்று காலை 6 மணி அளவில் தனியார் கால்டாக்சி நிறுவனத்துக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து டிரைவர் செல்வம் காருடன் அந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரை பயணிகள் யாரும் வரவில்லை.

சந்தேகம் அடைந்த அவர் கால்டாக்சி நிறுவனத்தில் பதிவான செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து அவர் சவாரியை ரத்து செய்து விட்டு காரை ஓட்ட முயன்றார். அப்போது மறைந்திருந்த 4 வாலிபர்கள் திடீரென செல்வத்தை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் காரை ஓட்டி கடத்தி சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த செல்வம் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு கார் கடத்தல் கும்பல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சார்லஸ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கால் டாக்சியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கார் செல்லும் இடத்தை கண்காணித்து விரட்டிச் சென்றனர்.

காலை 9 மணி அளவில் ஊரப்பாக்கம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கினர். உடனே அதில் இருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காரை மீட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கார் கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com