‘கபே காபி டே’ சித்தார்த்தா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவரது தந்தை மரணம்

பிரபல கபே காபி டே ஓட்டல் அதிபரான சித்தார்த்தா மரணம் அடைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவரது தந்தை கங்கையா ஹெக்டே இன்று காலமானார்.
கங்கையா ஹெக்டே
கங்கையா ஹெக்டே
Published on

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் கபே காபி டே எனும் பிரபல தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி சித்தார்த்தா மாயமானார். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது சடலம் நேத்ராவதி ஆற்றில் மறுநாள் காலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மரணம் உறுதியானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரது மரணம் தொழில் அதிபர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனிப்பட்ட முறையில் எனக்கு சித்தார்த்தா குறித்து தெரியாது. அவரது நிதிநிலைகள் குறித்தும் எதுவும் தெரியாது.

ஆனால், தொழில் முனைவோர் தங்கள் சுயமரியாதையை இழக்க, தொழில் தோல்வியை அனுமதிக்கக்கூடாது என்பதை நான் அறிவேன். இப்படி செய்வது தொழில் முனையும் சுய தொழிலையும் அழித்துவிடும்’ என கூறினார். மேலும் பல்வேறு தரப்பினரிடையே இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டே. இவருக்கு 96 வயதாகிறது. 1 மாதத்திற்கு முன்பு  அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து விட்டார். தலையில் பலத்த அடிபட்ட அவருக்கு மைசூரில் உள்ள சாந்தவேரி கோபால கவுடா மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சுயநினைவு இல்லாமல் இருந்து வருகிறார். சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டது இதுவரை அவருக்கு தெரியாது. அவர் உடல்நிலை கடந்த சில தினங்களாக முன்னேற்றம் இல்லாமல் இருந்து வந்தது.

இச்சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், சித்தார்த்தாவின் தந்தை  கங்கையா ஹெக்டே மைசூருவில் உள்ள சாந்தவேரி கோபால கவுடா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இன்று  காலமானார். இது சித்தார்த்தா குடும்பத்தினரை மேலும் வேதனையில் மூழ்கச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com