முப்படைகளுக்கும் ஒரே தளபதி பதவியை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தளபதியை நியமிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
மத்திய மந்திரிசபை கூட்டம் (கோப்பு படம்)
மத்திய மந்திரிசபை கூட்டம் (கோப்பு படம்)
Published on

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றும்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

அவ்வகையில், கடந்த 15-8-2019 அன்று 6-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

’நமது நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற பிறகு நமது நாட்டின் பாதுகாப்பு நிலை பற்றி ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. அதில் ராணுவ அமைச்சருக்கு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்குவதற்கு தலைமை தளபதி பதவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு நரேஷ் சந்திரா குழுவும் தலைமை தளபதி பதவியை பரிந்துரைத்து இருந்தது. எனவே விரைவில் முப்படைகளுக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தளபதியை நியமிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

நான்கு நட்சத்திர அந்தஸ்துடன் முப்படைக்கும் புதிய தளபதியாக பொறுப்பேற்கவுள்ளவர் ராணுவ விவகாரங்கள் துறைக்கான தலைவராகவும் விளங்குவார் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அநேகமாக, இந்த புதிய பதவிக்கு தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com