வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்- அதிமுக எம்எல்ஏ சத்தியா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்துள்ளதாக அதிமுக எம்எல்ஏ சத்தியா மீது கோவிந்தராஜ் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்- அதிமுக எம்எல்ஏ சத்தியா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்
Published on

சென்னை:

சென்னை வடபழனி சோமசுந்தர பாரதிநகர் சங்கம் சாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் டேபிள், சேர், பாத்திரம், சாமியானா பந்தல் போன்றவற்றை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறேன். கடையின் மேல்தளத்தை அதிமுக வத்தலக்குண்டு ஆறுமுகம் நினைவு மன்றத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.

தீபாவளி பண்டிகை செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்று தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்தியா கூறியதாக அவரது ஆட்கள் புதூர் உதவியா, கோகுல் என்கிற கோகுல கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து என்னிடம் கேட்டனர். நான் தற்போது பணம் இல்லை. பிறகு தருகிறேன் என்றேன்.

அவர்கள் பணம் தரவில்லை என்றால் உனது கடையை எங்கள் கட்சி அலுவலகமாக மாற்றி விடுவோம் என்று மிரட்டினார்கள். பாலசுப்பிரமணியன் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி எனது கடையை பூட்டி பொருட்களை அடித்து நொறுக்கினார். அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த 4-ந்தேதி நான் வெளியூர் சென்றிருந்தபோது சத்தியா எம்எல்ஏ கூறியதாக கோகுல், பாலசுப்பிரமணியன், புதூர் உதயா ஆகியோர் எனது கடையை உடைத்து பொருட்களை வெளியே எடுத்து போட்டு ரூ.76 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றனர். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி சத்தியா எம்எல்ஏ, கோகுல், பாலசுப்பிரமணி, புதூர் உதயா ஆகியோர் வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து என்னிடம் வந்து வழக்கை வாபஸ் வாங்கு மாறும் இல்லாவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளித்து என் கடையை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com