

கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு மட்டும்தான் வழக்கு தொடரப்பட்டது என நீதிபதிகள் கூறியதை தொடர்ந்து, போராட்ட காலத்திற்கு ஊதியம், வழக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்களில் பரிசீலனைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.
இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார். எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் நீண்ட ஆலோசனை நடத்திய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். நாளை காலை அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்புவார்கள். இதனால், நாளை காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.