வெம்பாக்கம் அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 9 பயணிகள் படுகாயம்

வெம்பாக்கம் அருகே அரசு பஸ்-லாரி மோதிக் கொண்டதில் 9 பயணிகள் படுகாயமடைந்தனர்.
வெம்பாக்கம் அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 9 பயணிகள் படுகாயம்
Published on

வெம்பாக்கம்:

காஞ்சீபுரத்தில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் 40-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்றிரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கூழ மந்தல் என்ற கிராமத்தில், வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

இந்த விபத்தில் அரசு பஸ்சும், லாரியும் நொறுங்கி சேதமடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த, காஞ்சீபுரத்தை சேர்ந்த அமிர்தராஜ் (வயது 33), சுமதி (44), வந்தவாசி தெள்ளாரை சேர்ந்த வினோதினி (33), சென்னையை சேர்ந்த அமுதா (35), ராமநாதன் (40), விழுப்புரத்தை சேர்ந்த சங்கர் (31), தூசி அடுத்த அத்தி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (28), வந்தவாசி துர்கை கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் (34), முத்திரை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகிய 9 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அமிர்தராஜ், சுமதி உள்பட 4 பேர் மட்டும் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்து காரணமாக வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com