

மதுரை:
தமிழகத்தில் அதிரடியாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன.
பொதுமக்கள் தினமும் பஸ் கண்டக்டர்களிடம் வாக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மதுரை பெரியார் நிலையம் முன்பு இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். கட்டபொம்மன் சிலை அருகே பஸ்களை மறித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் வெற்றிக்குமரன் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews