பஸ் கட்டணம் உயர்வு: அரசு பஸ் சிறைபிடிப்பு

பஸ் கட்டணம் உயர்வு: அரசு பஸ் சிறைபிடிப்பு

தமிழகத்தில் திடீரென உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும் நகர பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.5 என்றும் அதிகபட்சமாக ரூ.13 ஆகவும் இருந்தது. தற்போது கட்டண உயர்வால் அதிகபட்சமாக ரூ.13-ல் இருந்து 19 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய கட்டணம் ரூ.10 ஆகும்.

இந்த புதிய கட்டண உயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்ததால் பல இடங்களில் கண்டக்டருக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ரெயிலடி அருகில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் நகரக்குழு உறுப்பினர் குருசாமி தலைமையில் கட்சியினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோல் திருவை யாறில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகம முழுவதும் பஸ் கட்டண உயர்வால் வேதனை அடைந்துள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திருக்காட்டுப் பள்ளி, திருவையாறு உள்ளிட்ட கிராம மக்கள் அன்றாட காய்கறிகளை கிராமத்திற்கு வரும் பஸ்கள் மூலம் நகரத்திற்கு தினமும் வியாபாரத்திற்கு கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் டவுன் பஸ்களிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகபட்ச டிக்கெட் உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். 

இதையடுத்து மேலத்திருப்பந்துருத்தி பகுதி கிராம மக்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கண்டியூர்- திருக்காட்டுப் பள்ளி சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கத்திரிக்கொல்லை சாவடியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

உடனே சம்பவ இடத்துக்கு பட்டுக்கோட்டை தாசில்தார் ரகுராமன், தாலுகா இன்ஸ் பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- தஞ்சை சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இன்று காலை திடீரென மறியல் செய்தனர்.

இதையடுத்து மறியல் போராட்டம் நடத்திய 17 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com