புதுவையில் நாளை பஸ், ஆட்டோ, டெம்போ ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை பேருந்து, ஆட்டோ, டெம்போ ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. #MotorVehiclesAmendmentBill
புதுவையில் நாளை பஸ், ஆட்டோ, டெம்போ ஓடாது
Published on

புதுச்சேரி:

மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டோல்கேட் கட்டணத்தை கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் திட்டத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

புதுவையிலும் நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடக்கிறது. போராட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., தொ.மு.ச., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மேலும், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம், மணல் லாரி, பார்சல் சர்வீஸ், ரூட் லாரி, மினி லாரி, லோடு கேரியர் தொழிற்சங்கங்கள், வாகன உதிரிபாகம் கடை, சுற்றுலா வாகனம் தனியார் பேருந்து தொழிலாளர் சங்கம் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

இதனால் புதுவையில் நாளை பஸ், லாரி, ஆட்டோ, டெம்போ, சுற்றுலா வாகனங்கள் ஓடாது.

இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க செயலாளர் சேது செல்வம் கூறியதாவது:-

போக்கு வரத்து தொழிலாளர்களில் வாழ்வுரிமையை காக்க நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

அவர்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினரும், ஆதரவு தந்துள்ளனர். இதனால் நாளை பஸ், ஆட்டோ, டொம்போ, லாரி ஓடாது.

வாகன உதிரிபாக கடைகள், ஒர்க்‌ஷாப்புகள் மூடப்பட்டிருக்கும். போராட்டத்தையொட்டி, பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்கள், ஊர்வல மாக சென்று புதிய பஸ் நிலையம் அருகில் மறியல் போராட்டமும் நடத்த உள்ளோம்.

இவ்வாறு சேது செல்வம் கூறினார். #MotorVehiclesAmendmentBill

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com