

பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கமரூன் ஜமால் (வயது 50). இவர் நேற்று அம்மாபட்டினத்தில் இருந்து பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு தனது மனைவி ரெஜினா பீவியை (37) மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து கொண்டிருந்தார்.
பேராவூரணி அருகே வாத்தலைக்காடு பிரிவு சாலைக்கு அருகே வந்துகொண்டிருந்த போது, பேராவூரணியில் இருந்து அதிராம்பட்டினத்திற்கு சென்றுகொண்டிருந்த அரசு பஸ் வளைவில் திரும்பும் போது கமரூன் ஜமால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கமரூன் ஜமால் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் பலத்த அடிபட்டது. அவரது மனைவிக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பேராவூரணி அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே கமரூன் ஜமால் இறந்து விட்டார். அவரது மனைவி ரெஜினாபீவியை பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது மகன் சதாம்உசேன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.