

புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:-
மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும். பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்றுநோக்குகின்றன. உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஜிஎஸ்டி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. ஜிஎஸ்டியால் சிறு குறு நடுத்தர தொழில்துறை பலனடைந்துள்ளது. இதுவரை 40 கோடி பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். ஜிஎஸ்டி அமலானபின் சாமானிய மக்களின் மாதாந்திர சேமிப்பு 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2006-2016ம் ஆண்டுகளில் 27.10 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி நடைமுறை எளிமையாக்கப்படும். எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும். பண வீக்கம் அளவு கட்டுக்குள் உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கொண்டு செல்லப்படும்.
கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன், ஜிடிபியில் 52 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக குறைந்துள்ளது. துடிப்பான புதிய பொருளாதாரத்திற்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.