

புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் 2018-19 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்கு ஏகலைவா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும். கங்கை நதியை தூய்மைப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டம். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டப்படும். ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின் வசதி வழங்க ரூ.16ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான சமூக பொருளாதார பாதுகாப்புக்கு ரூ.39,135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூ.56.619 கோடியில் 279 திட்டங்கள் உருவாக்கப்படும்.
முத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடனில் 76% பெண்களுக்கு தரப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்; வயதான பெண்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 99 நகரங்கள் தேர்வு; ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த சர்வதேச எல்லைகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாதுறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை மேம்படுத்துவதில் இந்த அரசு புதிய சாதனை படைத்துள்ளது. அம்ருத் திட்டத்தின் கீழ் நகரங்களுக்கு நீர் விநியோகிக்க ரூ.77,640 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #tamilnews