

புதுடெல்லி:
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
தொழில் தொடங்குவதை எளிமையாக்க 372 வணிக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருமானக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. கருப்புப் பண தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது. ஜன. 15, 2018 வரையிலான காலத்தில் நேரடி வரி வளர்ச்சி விகிதம் 18.7%ஆக உள்ளது.
தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் ஊதியம் மாற்றியமைக்கப்படும். ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்.
வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூல் ஆகவில்லை என்பதால் உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த மாற்றமும் செய்யப்படாதது, வரி செலுத்துவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. #Budget2018 #UnionBudget2018 #tamilnews