

புதுடெல்லி:
வேல்ஸ் இளவரசர் சார்லஸ் 2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் 10வது அரசுமுறை சுற்றுப்பயணம் இதுவாகும். இன்று காலை டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இளவரசர் சார்லஸ் முன்னதாக டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்றார். குருநானக்கின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்பின் நினைவாகவும் குருத்வாரா வழிபாட்டில் கலந்து கொண்டார்.
‘குருநானக்கின் 550வது பிறந்த நாள் விழாவில், உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கிலாந்தில் சீக்கியர்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் மிகவும் மதிப்பு மிக்கவர்கள்’, என இளவரசர் சார்லஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தை வலிமையுடன் எதிர்கொள்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகளுடனும் இளவரசர் ஆலோசனை நடத்தினார்.
இளவரசர் சார்லஸ், தனது 71-வது பிறந்த நாளை 14-ந்தேதி (நாளை) இந்தியாவிலேயே கொண்டாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.