பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி: பிரிட்டன் பிரதமரின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீன் ராஜினாமா

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிரிட்டன் பிரதமர் தெரசா மேயின் முதன்மை செயலாளராக இருந்த டேமியன் கிரீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி: பிரிட்டன் பிரதமரின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீன் ராஜினாமா
Published on

லண்டன்:

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக நடந்துகொள்வதாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரசா மே உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரதமர் தெரசா மேயின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீன்னும் ஒருவர். கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட போலீஸ் சோதனையின் போது அவரது அலுவலக கணினியில் ஆபாசமான படங்கள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து அவருக்கு பிரதமர் தெரசா மே ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவரை  ராஜினாமா செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து டேமியன் கிரீன் நேற்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமாவை பிரதமர் தெரசா மே ஏற்றுக்கொண்டார். இருப்பினும் அவர், ‘தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து ராஜினாமா செய்துள்ளேன்’, என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com