பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கிய கார் - 4 பேர் உயிர் தப்பினர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஆனைவடபாதி பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கிய காரில் இருந்த கணவன், மனைவி உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாலம் இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கிய கார்
பாலம் இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கிய கார்
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் ஊராட்சி ஆனைவடபாதி என்ற இடத்தில் வாளவாய்க்கால் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. 6 அடி அகலம் கொண்ட இந்த பாலம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் கார் உள்பட சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.

இந்த நிலையில் நேற்று காலை பெருந்தரக்குடி ஊராட்சி சார்வான் என்ற கிராமத்தை சேர்ந்த தணிகாச்சலம்(வயது 45) என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் அம்மையப்பன் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை வெங்கடேஷ் என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் சென்ற கார், ஆனைவடபாதி பாலத்தின் வழியாக சென்றபோது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் கார் வாளவாய்க்காலுக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் காரில் சென்ற தணிகாச்சலம், அவருடைய மனைவி சாரதா(40), தினேஷ்(வயது 11), கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். பாலம் உடைந்து கார் விபத்தில் சிக்கியதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக அங்கு ஓடி வந்து 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com