உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்- குழந்தையுடன் இளம்பெண் புகார்

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று குழந்தையுடன் இளம்பெண் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
குழந்தையுடன் மனு கொடுக்க வந்த பிருந்தா.
குழந்தையுடன் மனு கொடுக்க வந்த பிருந்தா.
Published on

கோவை:

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிருந்தா (வயது 24). இவர் நேற்று காலை தன்னுடைய 4 வயது பெண் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் சுல்தான்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 35 வயது கூலி தொழிலாளியுடன் காதல் ஏற்பட்டது. எனது பெற்றோர் வேலைக்கு சென்ற பின்னர் எனது வீட்டுக்கு வந்த காதலன் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன்.

இதுகுறித்து என்னுடைய பெற்றோருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தனர். என்னை கண்டித்தனர். என்னை கர்ப்பமாக்கிய வாலிபருடன் திருமணம் செய்து வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன், கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்று கூறிவிட்டார்.

இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்னுடைய காதலனை கைது செய்தனர். இந்த நிலையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜாமீனில் வெளியே வந்த எனது காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்தார். ஆனால் ஊர்பொதுமக்கள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டனர்.

அவர் மனம் மாறி என்னை திருமணம் செய்வார் என்று காத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய உறவுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் பெண் குழந்தையுடன் அனாதையாக்கப்பட்டு உள்ளேன்.

குழந்தை அவருக்குதான் பிறந்தது என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ பரிசோதனைக்கும் நான் தயார். குழந்தையை ஏற்றுக்கொண்டு அவர் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் நான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்வேன். 

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com