பிரேசில்: சிறுவன் இதயத்தை ஊடுருவிய கம்பி - உயிர்பிழைத்த அதிசயம்

பிரேசில் நாட்டில் ஒரு 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கம்பி ஒன்று அவனின் மார்பை துளைத்தது. #Brazil #BoySpearedThroughHeart
பிரேசில்: சிறுவன் இதயத்தை ஊடுருவிய கம்பி - உயிர்பிழைத்த அதிசயம்
Published on

பிரேசிலியா:

பிரேசிலை சேர்ந்த மரைவால்டோ ஜோஸ் டா சில்வா(11) சிறுவன் வீட்டிற்கு வெளியே உள்ள ஏணியின் மீதேறி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பீப்பாய் ஒன்றினுள் அவன் தவறி விழுந்துள்ளான். பீப்பாயில் இருந்த இரும்பு கம்பி ஒன்று அவனின் மார்பை துளைத்து இதயத்தை ஊடுருவி நின்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, சில்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுவனின் இதயத் துடிப்பால் மார்பில் துளைத்திருந்த கம்பி அதிர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த கம்பி சிறுவனின் உடலில் இருப்பதால் அவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் முதலில் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், மிகவும் சவாலான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுவனின் உடலில் இருந்து அந்த கம்பியை வெளியேற்றினர். தற்போது சிறுவன் நல்ல உடல் நலத்துடன் உள்ளான். மேலும், அவனுக்கு மூச்சு விடுவதிலும் பிரச்சினைகள் இல்லை.

சிறுவனின் இதயத்தை கம்பி ஊடுருவி சென்றும் அவர் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com