தனியார் பள்ளியின் அலட்சியம்: கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ஆந்திராவில் தனியார் பள்ளி ஒன்றில் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புருசோத்தம் ரெட்டி
புருசோத்தம் ரெட்டி
Published on

அமராவதி:

ஆந்திர பிரதேச மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு இப்பள்ளியில் மதிய உணவு வாங்குவதற்காக சிறுவர் சிறுமியர் வரிசையில் நின்றனர். 

அப்போது புருசோத்தம் ரெட்டி என்ற சிறுவன் அருகிலிருந்த சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தான். இதையடுத்து பள்ளி ஊழியர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் இருந்த பள்ளியின் பணியாளர்களின் அலட்சியத்தாலேயே குழந்தை புருஷோத்தம் இறந்துள்ளதாக கூறி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் ரெட்டி மற்றும் முதல்வர் நாகமல்லேஸ்வர ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த பள்ளியில் உள்ள விடுதி விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டு வந்தது கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com