

சாயல்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே வடக்குசெவல் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடி கிராமத்தில் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி, மகள், மகனுடன் எஸ்.தரைக்குடியில் இருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஊருணியில் குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும்போது மகனும், மகளும் ஆழமான பகுதிக்கு சென்றதோடு, அங்குள்ள சேற்றில் சிக்கிக் கொண்டனராம்.
இதைஅறிந்த ராமநாதன் இருவரையும் காப்பாற்ற முயன்றார். மகளை காப்பாற்றிய அவர், மகன் ராமச்சந்திரனை(வயது8) காப்பாற்ற முயன்றார். ஆனால் சேற்றில் நன்றாக சிக்கியதால் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.