ஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

ஈராக்கில் குர்தீஸ் புத்தாண்டு விழாவுக்காக சென்றவர்களின் சொகுசு படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. #BoatAccident
ஈராக்கில் ஆற்றில் சொகுசு படகு மூழ்கிய விபத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
Published on

மொசூல்:

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த மொசூல் பகுதி ராணுவத்தால் மீட்கப்பட்டது. அங்கு குர்தீஸ் இன மக்களின் ‘நவ்ரஸ்’ என்ற புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே அப்பகுதி மக்கள் விடுமுறையை பொழுதுபோக்கு பகுதிகளுக்கு சென்று கழித்து வருகின்றனர். நேற்று டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள சுற்றுலா தலத்துக்கு ஏராளமான மக்கள் படகுகளில் சென்றனர்.

அதில் ஒரு சொகுசு சுற்றுலா படகு நடுவழியில் சென்றபோது தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் படகு முழுவதும் ஆற்றில் முழ்கியது.

இச்சம்பவத்தில் படகில் பயணம் செய்த 100 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 61 பேர் பெண்கள். 19 பேர் குழந்தைகள் ஆவர்.

இவர்கள் தவிர 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என ஈராக் பிரதமர் அதெல் அப்தெல் மாக்டி தெரிவித்துள்ளார்.

படகு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த படகு விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

அதிக ஆட்களை படகில் ஏற்றியதும், ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததும் விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே படகு கம்பெனியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இக்கம்பெனியின் படகு போக்குவரத்துக்கு தடை விதித்தும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்த மொசூல் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக குர்தீஸ் இன மக்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் இத்தகைய விபத்து நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  #BoatAccident

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com