புளூ வேல் விளையாட்டால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - உ.பி.யில் பரிதாபம்

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஹாமீர்பூர் மாவட்டத்தில் புளூ வேல் விளையாட்டால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளூ வேல் விளையாட்டால் 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - உ.பி.யில் பரிதாபம்
Published on

லக்னோ:

நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படுவது ‘புளூ வேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு. செல்போனில் பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் விளையாடப்படும் இந்த விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கு உலைவைக்கிறது. அவ்வகையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவனும் இந்த விளையாட்டுக்கு பலியாகி உள்ளான்.

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஹாமீர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாகா கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் சிங் கின் மகன் பார்த் சிங் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தான். பார்த் கடந்த சில நாட்களாக புளூ வேல் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. அவனது பெற்றோர்கள் எவ்வளவோ கூறியும் சிறுவன் விளையாட்டை கைவிடவில்லை.

இதனையடுத்து நேற்று இரவு பார்த் வெகு நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் விக்ரம் சிங்கிற்கு சந்தேகம் வந்துள்ளது. பின்னர் கதவை உடைத்து பார்த்த போது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

சிறுவன் புளூ வேல் விளையாட்டின் தாக்கத்தினால் தான் தற்கொலை செய்து கொண்டான் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவனது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்று நாடு முழுவதும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் நீலத் திமிங்கலம் விளையாட்டை நாடு முழுவதும் தடை செய்தனர். இருப்பினும் பல மாணவர்கள் சட்ட விரோதமாக விளையாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com