

கவுகாத்தி:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று ஒரு சிறுவன் ‘நீல திமிங்கலம்’ ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டபோது அதில் குறிப்பிட்ட சவாலின்படி தன்னைத்தானே வெட்டிக்கொண்டான். உடனே அவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். நாகோன் மாவட்டம் சாமகுரி என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் நீலதிமிங்கல விளையாட்டின் முதல் சவாலான திமிங்கலம் படத்தை தங்கள் மணிக்கட்டில் கத்தியால் கீறி வரைந்திருந்தனர். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் இதுபற்றி ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் உடனே மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுவர்களுக்கு மனநல கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.
ஜோர்ஹத் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு வாலிபர் தனது முகநூல் பக்கத்தில், தான் நீலதிமிங்கலம் விளையாட்டில் மேம்பட்ட நிலையை அடைந்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்ததோடு, தனது உடலில் உள்ள வெட்டுக்காயங்கள் படத்தையும் வெளியிட்டு இருந்தான். இதை பார்த்த அவனது நண்பர்கள் அவனது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவன் மாலையில் இருந்து திடீரென மாயமாகிவிட்டான்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து மாநில போலீசார் இதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.