பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - சித்து மன்னிப்பு கேட்க பா.ஜனதா மகளிர் அணி தலைவி வலியுறுத்தல்

பெண்கள் குறித்து தவறாக கருத்து தெரிவித்த சித்து அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பிரதேச பா.ஜனதா மகளிர் அணி தலைவி இந்து கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - சித்து மன்னிப்பு கேட்க பா.ஜனதா மகளிர் அணி தலைவி வலியுறுத்தல்
Published on

சிம்லா:

பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்கு பெயர் போனவர். கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நேற்று முன்தினம் இந்தூரில் பேட்டி அளித்த சித்து, ‘ திருமணம் முடிந்த மணப்பெண் மற்றவர்கள் தன்னை உற்றுநோக்க வேண்டும் என்பதற்காக கை வளையலை குலுக்கி சைகை செய்வார். இதேபோல் பிரதமர் மோடியும் மற்றவர்கள் தன்னை கவனிக்கும்படி பேசி வருகிறார்’ என்றார்.

சித்துவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெண்கள் குறித்து தவறாக கருத்து தெரிவித்த சித்து அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பிரதேச பா.ஜனதா மகளிர் அணி தலைவி இந்து கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ இந்திய பெண்கள் தற்போது எல்லா துறைகளிலும் கால்பதித்து சாதித்து வருகின்றனர். ஆனால் சித்துவோ இதுபற்றி கவனத்தில் கொள்ளாமல் பெண்களுக்கு எதிரான மனநிலையில் உள்ளார். இந்த கருத்து தொடர்பாக சித்துவும், காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com