

சென்னை:
வளசரவாக்கம் கண்ணம்மாள் நகர் ராமமூர்த்தி ரோடு குமரன் அவின்யூ பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்கண்ணா (வயது 34) என்பவர் அங்கிருந்த பெண் போலீசிடம் தகாத வார்த்தைகளை கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்களிடமும் சுரேஷ் கண்ணா ரகளையில் ஈடுபட்டார். திடீரென போலீஸ்காரர் ஜோதிமுருகன் என்பவரை சுரேஷ் கண்ணா தாக்கினார். போலீசார் சுரேஷ் கண்ணாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது சுரேஷ் கண்ணா மீண்டும் காவலர்களை காலால் எட்டி உதைத்து தள்ளினார். இதில் போலீகாரர் ஜோதிமுருகன் லேசான காயம் அடைந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஆகியோர் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சுரேஷ் கண்ணா மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ்கண்ணா பா.ஜனதா இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் வழக்குகளில் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது.