மாளிகை தண்ணீர் தொட்டியை உயர்ரக ஈவியன் குடிநீரை கொண்டு நிரப்பிய கோடீஸ்வரர்

தனது மாளிகை தண்ணீர் தொட்டியை உலகின் மிக விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை கொண்டு அமீரக கோடீஸ்வரர் நிரப்பி உள்ளார்.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்
Published on

லண்டன்:

லண்டனில் உள்ள ரூ.500 கோடிக்கும் அதிகம் மதிப்புடைய மாளிகையின் தண்ணீர் தொட்டியில் அமீரக கோடீஸ்வரர் ஒருவர் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை நிரப்பிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமீரக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான ஷேக் கலிஃபா பின் சயீத் அல் நஹ்யான் தண்ணீர் தொட்டியில் உயர் ரக ஈவியன் குடிநீரை நிரப்பி உள்ளார். இதற்காக ஈவியன் குடிநீர் பாட்டில்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈவியன் குடிநீர் லிட்டருக்கு 600 ரூபாய் வரை விலைக்கு விற்கப்படுகிறது. தற்போது 71 வயதாகும் ஷேக் கலிஃபா, லண்டனில் உள்ள அந்த 18 ஆம் நூற்றாண்டு மாளிகையில் ஆண்டுக்கு எப்போதாவது ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கிச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

லண்டனில் இவருக்கு சுமார் 5.19 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது ஒன்றுவிட்ட ஒரு சகோதரரே மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளர். மேலும் ஷேக் கலிஃபா அல்லது அவரது குடும்பத்தினர் எவரும் 17 ஆண்டுகளாக வருகை தராத, மாட்ரிட்டுக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு மாளிகையின் பாதுகாப்புக்கு என 15 நிரந்தர ஊழியர்களுக்காக ஆண்டுக்கு ரூ.4.15கோடிக்கும் அதிகமாக செலவிட்டார் என்பது தெரியவந்துள்ளது. ஷேக் கலிஃபாவின் தந்தையே ஐக்கிய அமீரகத்தை நிறுவியவர் என்பதால், 2004-ல் அவர் மறைவுக்கு பின்னர் இவர் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com