

பாட்னா:
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அரசு மீது கடந்த 28-ந்தேதி மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் அவர் வெற்றி பெற்றதும் மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி குர்ஷித் பெரோஸ் அகமது “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்டார்.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த குர்ஷித், ‘ஜெய் ஸ்ரீராம்‘ என கோஷமிட்டது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க் கட்சிகள் அவரது செயலை விமர்சனம் செய்துள்ளன.
இமாரத் ஷரியா என்ற அமைப்பு குர்ஷித்துக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதுடன் அவரை முஸ்லிம் மதத்தில் இருந்து நீக்கி ‘பட்வா’ உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதையடுத்து மந்திரி குர்ஷித் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
நான் ராம், ரகீம் இருவரையும் வணங்குகிறேன். பீகார் மக்களின் நலனுக்காகத்தான் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டேன். இதில் எந்தவித தயக்கமும் இல்லை. என்றாலும் இது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குர்ஷித்தின் செயலுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.