

பவானிசாகர்:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 105 அடிக்கு தண்ணீர் நிறுத்த முடியும். நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். அங்கு மழை பொழியும் போதெல்லாம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
அணையில் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக பெறும் நீரை கொண்டு சுமார் 2½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 456 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.42 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1467 கனஅடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டமும் 82.57 அடியாக சற்று உயர்ந்தது.