

சண்டிகர்:
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த ஆண்டு அரியானா மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாரத மாதாவை பற்றி பரபரப்பாக பேசினார்.
ராம்தேவ் பேசுகையில், “நாங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்கிறோம். ஆனால் பாரத மாதாவை யாராவது அவமதித்தால் சும்மா இருக்க மாட்டோம். அவர்களது தலையை வெட்டி துண்டிப்போம்” என்று கூறினார்.
ராம்தேவின் இந்த பேச்சு வன்முறையைத் தூண்டி விடும் வகையில் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
அரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் நகர கோர்ட்டில் ராம்தேவ் மீதான இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது யோகா குரு ராம்தேவ் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாதபடி கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்டு 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.