பர்கூர் மலைப்பகுதியில் 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

பர்கூர் மலைப்பகுதியில் 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மேற்கு பகுதியான தம்புரெட்டி என்ற மலைக்கிராமத்தில் இருந்து இன்று காலை ஒரு காரில் 9பேர் தாமரைகரை என்ற பகுதிக்கு சென்றனர்.

மணியாச்சிபள்ளம் என்ற மலைப்பகுதியில் அவர்கள் வந்த கார் வந்து கொண்டிருந்தது. ஒன்னாங்கரைமேடு என்ற பகுதியில் வந்தபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் திடீரென பின்னோக்கி சென்றது. அங்குள்ள தடுப்பு சுவற்றை உடைத்துக்கொண்டு 60 அடி கிடுகிடு பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

காரில் இருந்தவர்கள் ‘அய்யோ..அம்மா..’ என கூச்சலிட்டனர். இந்த விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 60 அடி பள்ளத்தில் கயிறு மூலம் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 5பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்ட போலீசார் ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பலியானர்வகள் உடல்கள் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்கள் பெயர் விபரமும், படுகாயமடைந்தவர்கள் விபரமும் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com